சென்னை: மக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை உட்பட சென்னையில் 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை இலவசமாக வழங்கும் மையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன.
சென்னை குடிநீர் வாரியம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
சென்னை மக்கள் சுத்தமான குடிநீருக்காக மாதந்தோறும் கணிசமான தொகையைச் செலவிடுகின்றனர்.
கடற்கரை உட்பட வெளியே எங்கு சென்றாலும் குறைந்தபட்சம் ரூ.20 கொடுத்து குடிநீர்ப் புட்டி வாங்க வேண்டியுள்ளது.
இதையடுத்து மக்களின் சிரமத்தைப் போக்க குடிநீர்வாரியம் சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில், வட சென்னையில் தண்டையார்பேட்டை மணிக்கூண்டு உள்ளிட்ட 50 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடிநீர் மையங்களில் ஒரு லிட்டர், 150 மில்லி லிட்டர் அளவில், பொத்தானை அழுத்தி குடிநீர் பிடித்துக்கொள்ள முடியும்.
அனைத்து மையங்களிலும் பாதுகாப்புக்காக கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டு வருகின்றன.

