சென்னை: சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31ஆம் தேதி வரை கண் மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக கிளைக்கோமா (கண் அழுத்த நோய்) வாரம் மார்ச் 9 முதல் 15ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த இலவச சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்ணுக்குள் அழுத்தப் பரிசோதனைகள், கண் நரம்பு மதிப்பாய்வுகள், பார்வை குறித்த சோதனைகள் போன்றவை இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன.
‘எதிர்காலத்தை தெளிவாகக் காணுங்கள்’ என்பதே இந்த ஆண்டுக்கான கருப்பொருள்.
“கிளைக்கோமா எனப்படும் கண் அழுத்த நோய் பார்வையிழப்பை ஏற்படுத்துகிறது.
“இந்தப் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால், பார்வைத் திறன் குறைவதைத் தடுக்க முடியும். அலட்சியமாக இருந்தால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும்,” என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும் 31ஆம் தேதி வரை இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கண் அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மருந்துகள், லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அஸ்வின் அகர்வால் தெரிவித்துள்ளார்.