சென்னை: மறைந்த காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினரான ஈவிகேஎஸ் இளங்கோவன் 14.12.2024 சனிக்கிழமையன்று இயற்கை எய்தினார்.
கடந்த 21.12.1948ல் ஈரோட்டில் பிறந்த இவர், இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக 1996 முதல் 2002 வரை பணியாற்றினார்.
2004ல் நாடாளுமன்ற உறுப்பினராக கோபிச்செட்டிப்பாளையம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ஒன்றிய அரசில் ஜவுளித்துறை இணை அமைச்சராகப் பொறுப்பேற்று சிறப்பான முறையில் பணியாற்றினார்.
தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் சிறப்பாக மக்கள் பணியாற்றினார். அரசியல், மக்கள் பணி, பொது வாழ்வு என அனைத்து தளங்களிலும் நீண்ட அனுபவம் கொண்டவர். தன் சிந்தனைக்குச் சரியாகப்பட்டதை துணிவுடன் வெளிப்படுத்தியவர்.
அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி மக்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது பொது வாழ்வைப் போற்றும் விதமாக அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

