சென்னை: பட்டாபிராமில் ரூ.279 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட டைடல் பார்க்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (நவம்பர் 21) திறந்து வைத்தார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சிறிய நகரங்களில் டிட்கோ மற்றும் எல்காட் நிறுவனம் இணைந்து உருவாக்கி உள்ள டைடல் பார்க் நிறுவனம் சார்பில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான (ஐ.டி.) உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
அதன்படி, திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில் 21 மாடிகளைக் கொண்ட டைடல் பார்க் கட்டடத்தைக் கட்ட கடந்த 2017ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.279 கோடி செலவில் 5.57 லட்சம் சதுர அடி பரப்பளவில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடத்தில் ஒரே நேரத்தில் 927 கார்கள் மற்றும் 2,280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தக்கூடிய வசதி, உணவகங்காடி (ஃபுட் கோர்ட்), 24 மணி நேரக் கண்காணிப்பு பாதுகாப்பு வசதி, பலபயன் அரங்கம், உடற்பயிற்சிக் கூடம், உள்விளையாட்டு அரங்கம், தியானம் செய்வதற்கான அறை, மின்சார வாகனங்கள் மின்னூட்டம் செய்வதற்கான வசதி, மருத்துவ மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கட்டடத்தின் மாடியில் தோட்டமும் சூரியசக்தி மின்சார உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், இந்திய பசுமைக் கட்டட மன்றம் (ஐஜிபிசி) பிளாட்டினம் தர மதிப்பீடு செய்யப்பட்ட பசுமைக் கட்டடக் கருத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது.
இக்கட்டடத்தின் 13 மற்றும் 16வது மாடிகளுக்கு இடையே தொங்கும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இரு மாடிகளில் அலுவலகம் அமைக்கும் நிறுவனங்களுக்கு பிரீமியம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதுகுறித்து, டிட்கோ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இந்த டைடல் பார்க் மூலம் ஐந்து ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதுவரை இரண்டு நிறுவனங்கள் முன்பதிவு செய்துள்ளன,’’ என்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து, பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சடகோபன் கூறுகையில், “பட்டாபிராமில் டைடல் பார்க் அமைக்கவேண்டும் என்ற எங்களது 14 ஆண்டுகால கனவு நிறைவேறியுள்ளது. 40 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த இடத்தில் 11 ஏக்கர் பரப்பளவில்தான் டைடல் பார்க் கட்டப்பட்டுள்ளது.
“எஞ்சிய காலி இடத்திலும் டைடல் பார்க் கட்டவேண்டும். இதன்மூலம், பட்டாபிராமைச் சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடைவதோடு, அரசுக்கும் வருவாய் கிடைக்கும்,” என்றார்.