சென்னை: அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தனக்குப் பிறப்பித்துள்ள சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக அவதூறு கருத்தை வெளியிட்டதாக ஹெச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டது.
மேலும் திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தும் சர்ச்சையானது.
இது தொடர்பான இரண்டு வழக்குகளை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஹெச்.ராஜாவுக்கு தனித்தனியாக ஆறு மாத சிறைத் தண்டனையையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து, தற்போது மேல்முறையீடு செய்துள்ளார் எச்.ராஜா. தன் மீதான புகாரை நிரூபிக்க நேரடி சாட்சியங்கள், ஆதாரங்கள் இல்லாத நிலையில், விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சட்ட விரோதமானது என்றும் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஹெச்.ராஜா தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.