மதுரை: விஜய் ரசிகர்களில் பாதிப் பேர், தமக்குத்தான் வாக்களிப்பர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் வருகையால் தமது கட்சியின் வாக்குவங்கியில் எந்தவிதமான சேதாரமும் ஏற்படாது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
“எங்களைப் பொறுத்தவரை பாஜக தேவையில்லாத கட்சி. நீட் தேர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்ட மக்கள் விரோத திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன. அதற்குத் துணை நின்றது திமுக,” என்று சீமான் குற்றஞ்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், நடிகரைப் பார்க்க வரும் கூட்டமெல்லாம் தேர்தலில் வாக்குகளாக மாறாது என்றார்.
கூட்டணியில் இருப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஜய்யின் கொள்கை பெருந்தன்மையை ஏற்று அவருடன் இணைவது அவரவர் விருப்பம் என்று குறிப்பிட்ட சீமான், நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி அமைக்காது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
“நாம் தமிழர் கட்சி தனித்துத்தான் போட்டியிடும். விஜய்யின் அரசியல் வருகையால் எங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லை,” என்று சீமான் மேலும் கூறினார்.