சென்னை: தமிழகப் பள்ளிகளில் ‘ஆரோக்கியமான முதுகெலும்பு –ஆரோக்கியமான மாணவர்கள்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கவேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு, இந்திய இயன்மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே அதிக எடையுள்ள புத்தகப் பைகளைச் சுமப்பது, நீண்ட நேரம் அமர்ந்து படிப்பது, மின்னிலக்கச் சாதனங்களின் அதிகப்படியான பயன்பாடு ஆகியவற்றால் முதுகு வலி, கழுத்து வலி, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் இக்குறைபாடுகளைக் களைய இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
இது, ஆரோக்கியமான, போதைப் பழக்கங்களற்ற எதிர்காலத் தலைமுறையை உருவாக்கும் ஒரு சமூக முதலீடாகவும் அமையும்.
எனவே, கல்வி, சுகாதாரத் துறையோடு இணைந்து இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இதன்மூலம் ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின் உடல்நலனைப் பரிசோதனை செய்து, தோள்பட்டை முன்சாய்வு, முதுகுத்தண்டு, பாத வளைவு குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும்.
மேலும், பிசியோதெரபி வழிகாட்டுதல், பயிற்சிகள் மூலம் அவற்றுக்குத் தீர்வு காண முடியும் என்றும் தேவையற்ற புத்தகச் சுமையைக் குறைத்து வகுப்பறைகளில் உடல் அமைப்புக்கு ஏற்ற அமர்வு முறையை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

