சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை அன்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இதையடுத்து, புதன்கிழமை (டிசம்பர் 11) ஆறு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழை பெய்யும்.
சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 9ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, டிசம்பர் 10ஆம் தேதியன்று காலை தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
எனவே, மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.