தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடலூரில் விடிய, விடிய கனமழை: குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது

2 mins read
c444bf91-ece7-4e2f-8771-8cdb8a8fb28b
காவல்துறையினரும் தன்னார்வலர்களும் இணைந்து பாரந்தூக்கி இயந்திரம் மூலம் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றினர். - படம்: தமிழக ஊடகம்

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை பெய்ததால் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் மரங்கள் விழுந்தன. அவை உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சனிக்கிழமை (நவம்பர் 30) இரவு முதல் விடிய விடிய கடலூர் மாவட்டம், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், வேப்பூர், அண்ணாமலைநகர், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. கடலூர் புதுச்சேரி சாலை, காட்டுமன்னார்கோவில்- ஜெயங்கொண்டம் சாலை, குள்ளஞ்சாவடி, கடலூர் கே.என் பேட்டை, கடலூர் குண்டுசாலை, கடலூர் ஜட்ஜ் பங்களா ரோடு உள்ளிட்ட பல இடங்களில் மழையால் மரங்கள் விழுந்தன. காவல்துறையினரும் தன்னார்வலர்களும் இணைந்து பாரந்தூக்கி இயந்திரம் மூலம் விழுந்த மரங்களை உடனுக்குடன் அகற்றினர்.

கடலூர் நகரில் பல்வேறு சாலைகளில் ஆறு போல மழை தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு குடியிருப்புகளில் மழை தண்ணீர் புகுந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) காலை கடலூர் அருகே கன மழையால் பாதிரிக்குப்பம் ஊராட்சி விக்னேஸ்வர நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ராமன், ஐயப்பன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இக்குழுவினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தில் மழையளவு கடலூரில் 235.5 மிமீ, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் 213.2 மிமீ, வானமாதேவியில் 185 மிமீ, பண்ருட்டியில் 140 மிமீ, விருத்தாசலத்தில் 87 மிமீ, வடக்குத்தில் 79 மிமீ, வேப்பூரில் 75 மிமீ, பரங்கிப்பேட்டையில் 70.9 மிமீ, ஸ்ரீமுஷ்ணத்தில் 68.3 மிமீ, குறிஞ்சிப்பாடியில் 65 மிமீ, சிதம்பரத்தில் 51.5 மிமீ, காட்டுமன்னார்கோவிலில் 48 மிமீ, லால்பேட்டையில் 22 மிமீட்டரும் மழை பெய்திருந்தது.

கடலூர் புதுப்பாளையம், குடிகாடு, சிதம்பரம் அருகே ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்