சென்னை: திருநெல்வேலி கோர்ட் அருகே நடந்த கொலை சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களின் முன்பு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாயாண்டி என்பவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், “பாதுகாப்பு விஷயத்தில் காவலர்கள் என்ன செய்கிறார்கள்?’ என, சரமாரியாக கேள்வி எழுப்பியது. நீதிமன்றம் முன்பு, பட்டப்பகலில் கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்த சம்பவத்தையொட்டி, தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட காவல் ஆய்வாளர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், “தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் கைத்துப்பாக்கியுடன் எஸ்.ஐ. மற்றும் துப்பாக்கிகளுடன் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரிவு அலுவலர்களும் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்,” என்று சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.