சென்னை: தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், இயற்கைப் பேரிடர் நிவாரணப் பணிகளில் எப்போதும் முன்கள வீரராகத் தாம் துணைநிற்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வேளையில், சென்னையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
கொளத்தூர் பகுதிக்கு உட்பட்ட யானைகவுனி பகுதியை அக்டோபர் 15ஆம் தேதி முதல்வர் நேரில் பார்வையிட்டார்.
அப்போது, மழைநீரை வெளியேற்றுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும் துப்புரவுப் பணியாளர்களுடன் சேர்ந்து தேநீர் அருந்திய முதல்வர், இதுகுறித்து தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளத் தன்னலம் கருதாமல், நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்கக் களம் காண்பவர்கள் துப்புரவுப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாகத் துணைநிற்பேன்,” என்று முதல்வர் குறிப்பிட்டிருப்பதாகத் தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.