சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், “பொதுமக்களுக்கு நான் வேலையைத் தருவேன். ஆனால் மற்றக் கட்சிகள் போல் அண்டா, குண்டா, மிக்ஸி போன்ற பொருள்களைத் தரமாட்டேன்,” என்றார் திரு சீமான்.
“வலிமைமிக்க ஆயுதம் வாக்கு; ஒற்றை வாக்கை உலகம் திரும்பிப் பார்க்க வைக்கும் வாக்காக மாற்ற முடியும். ஒருமுறை ஆட்சியை என்னிடம் தாருங்கள். நல்ல கல்வி, உலகத் தரம் வாய்ந்த மருத்துவம், தூய குடிநீரை இலவசமாகத் தருகிறேன்,” என்றார் அவர்.
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் மதுக்கடைகளை மூட முடியும், நீரைத் தேக்கி வைக்க முடியும் என்று சீமான் குறிப்பிட்டார்.
“தற்போது ஒரு தொகுதிக்கு ரூ.25 கோடி கொடுத்து, வாக்காளர் ஒருவருக்கு ரூ. 2,000 கொடுக்கிறவன்தான் வேட்பாளர். அப்படி என்றால் ரூ.25 கோடி முதலீடு செய்கிறவன் லாபத் தேவைக்குச் செய்கிறானா? மக்கள் சேவைக்குச் செய்கிறானா? கொஞ்சம் சிந்தித்து வாக்களியுங்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

