சென்னை: தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ள நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு பள்ளி மாணவர்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆலோசனை வழங்கி உள்ளார்.
இந்திய அளவில் பள்ளி மாணவர்களிடம் மன அழுத்தம் இல்லாத சூழலை உருவாக்க பிரதமர் மோடி தலைமையில் ‘தேர்வு வீரர்கள்’ என்ற இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த இயக்கம் சார்பில் ‘பரிக் ஷா பே சர்ச்சா’ என்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) திருவள்ளூரில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினார்.
அந்த நிகழ்வில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.
ஆளுர் ரவி பேசுகையில், “மாணவ, மாணவியர் தினமும் அதிகாலையில் எழுந்து, உடற்பயிற்சியும் யோகப் பயிற்சியும் செய்யவேண்டும்.
“கடினமான பாடங்களைப் படிக்க வேண்டும். நல்ல பழக்கங்கள், கடினமான தேர்வுகளை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
“தேர்வில் வினாத்தாளை வாங்கியதும் தெரியாத கேள்விகளைப் பார்த்து பதற்றப்படக் கூடாது.
தொடர்புடைய செய்திகள்
“நாம் நினைத்தது நடைபெறாவிட்டால், அதைத் தோல்வியாகக் கருதாமல் சிறு பின்னடைவாகவே கருதவேண்டும்.
“சாதிக்க வேண்டுமாயின் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
“சாதனையாளர்களின் சுயசரிதையைப் படித்து, அதை ஊக்கமாக எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார் அவர்.
மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆளுநர், தேர்வை துணிச்சலுடன் எதிர்கொள்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய ‘தேர்வு வீரர்கள்’ என்ற புத்தகத்தை அவர்களுக்கு வழங்கினார்.

