தருமபுரி: பெண்கள் திரண்டு சென்று மது விற்பனை செய்த கடைகளை அடித்து நொறுக்கிய சம்பவம் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அங்கு சில கடைகளில் கள்ளத்தனமாக மது வகைகள் விற்பனை செய்யப்பட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இது குறித்து பொதுமக்கள் பரவலாகப் புகார் எழுப்பத் தொடங்கினர்.
கள்ளச்சந்தையில் விற்கப்படும் மதுவால் குடும்பத்தின் பொருளியல், குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு எனப் பல்வேறு வகையிலும் பாதிக்கப்படுவதாகப் பென்னாகரம் அருகேயுள்ள போடூர் பகுதி மக்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.
இந்நிலையில், பொறுமையிழந்த போடூர் பெண்கள் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) திரளாக ஒன்றுகூடி கள்ளச்சந்தையில் மது விற்ற நான்கு கடைகளுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அக்கடைகள்மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
குறிப்பிட்ட ஒரு கடையில் மது விற்றவர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு கூடிய பெண்கள் அவரைத் தாக்க முயன்றனர். அவர் ஓட்டம்பிடித்தபோது பெண்கள் பலர் அவரை விரட்டிச் சென்றனர்.
இந்நிலையில், அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மது விற்பனையில் ஈடுபட்ட நான்கு கடைகளைத் தற்காலிகமாக மூடியதுடன், மூன்று பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 56 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.


