சென்னை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சி புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறுவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் உள்ள நூல் வெளியீட்டாளர்கள், தனித்தனி கூடாரங்கள் அமைத்து தங்கள் பதிப்பக புத்தகங்களைக் காட்சிக்கு வைப்பர்.
கண்காட்சியுடன் சொற்பொழிவு போன்றவையும் நடைபெறும்.
இக்கண்காட்சி 1977ஆம் ஆண்டிலிருந்து நடத்தப்படுகிறது.
அடுத்ததாக நடத்தப்படும் கண்காட்சி 48வது கண்காட்சியாகும்.
இந்நிலையில், புத்தகக் கண்காட்சி முன்கூட்டியே டிசம்பர் மாதம் 27ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
நூல் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சென்னையில் டிசம்பர் 21ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பேரணி நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
பேரணியில், தமிழ்நாட்டின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
பேரணியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.