பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு சென்னை நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ‘ஆனந்தம்’, ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தனது சகோதரர் சுபாஷ் சந்திரபோசுடன் இணைந்து சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்.
இதற்காக, தனியார் நிறுவனம் ஒன்றிடம் லிங்குசாமி கடனாகப் பெற்ற ரூ.35 லட்சம் கடன் தொகையை அவர் திருப்பிச் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், அந்நிறுவனத்துக்கு லிங்குசாமி அளித்த வங்கி காசோலை அவரது கணக்கில் பணம் இல்லாததால் திரும்பிவிட்டது.
இதையடுத்து, அந்நிறுவனம் லிங்குசாமிக்கு எதிராக நீதிமன்றத்தை அணுகியது. பல ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் லிங்குசாமியும் அவரது சகோதரரும் குற்றவாளிகள் என சென்னை அல்லிகுளம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

