சென்னை: தமிழ்நாட்டின் முன்னணி துணிக்கடைகளில் ஒன்றாக விளங்கும் போத்தீஸ் உரிமையாளரின் இரு மகன்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 1977ஆம் ஆண்டு கே.வி.பி. சடையாண்டி போத்தி மூப்பனாரால் முதன்முறையாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கப்பட்டது போத்தீஸ். இப்போது அந்நிறுவனத்திற்குச் சென்னை, திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில், திருச்சி உள்ளிட்ட 15 இடங்களில் கடைகள் இருக்கின்றன.
அத்துடன், ‘சொர்ண மஹால்’ எனும் பெயரில் சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நகைக்கடைகளையும் அந்நிறுவனம் நடத்தி வருகிறது.
இந்நிலையில், சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள போத்தீஸ் உரிமையாளரின் இரு மகன்களான போத்தி ராஜா மற்றும் அசோக்கின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 12 பேர் சோதனை நடத்தி வருவதாகத் தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காலை 7.20 மணிமுதல் ஒவ்வொரு வீட்டிலும் தலா ஆறு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சோதனையின்போது வருமானம், சொத்து தொடர்பான ஆவணங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், முதலீட்டுப் பதிவுகள் உள்ளிட்டவை விரிவாகச் சரிபார்க்கப்படுகின்றன என்றும் அது தொடர்பான அதிகாரத்துவ கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

