குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அதிகரிப்பு

குற்றப் பின்னணி வேட்பாளர்கள் அதிகரிப்பு

2 mins read
c5e93afd-a3da-4e70-a06f-1591acfe60eb
குற்றப் பின்னணி வேட்பாளர்கள் பட்டியலில் அதிமுகவினர் முதலிடத்தில் இருப்பதாக ஏடிஆர் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. - படம்: தினத்தந்தி

சென்னை: தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 23) 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு கட்சியிலும் குற்றப் பின்னணி கொண்ட எத்தனை பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர், கடந்த தேர்தலைக் காட்டிலும் அவர்களின் எண்ணிக்கை எந்த அளவுக்குக் கூடியிருக்கிறது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பான தரவுகளை ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் (ADR) என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராம் ஆகியோர் அந்த விவரங்களை வெளியிட்டனர்.

மொத்தமுள்ள 4,023 வேட்பு மனுக்களில் 3,992 பேரின் வேட்பு மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களில் 722 பேர் (18%) குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்றும் 404 பேர் (10%) கடுமையான குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்றும் தங்களது பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் 13%ஆக இருந்த குற்றப் பின்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கை இந்தத் தேர்தலில் 18%க்கு உயர்ந்துள்ளது. அதன்படி, மொத்த வேட்பாளர்களில் ஐவரில் ஒருவர்மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

கட்சிவாரியாக வெளியிடப்பட்ட விவரங்களில், அதிமுகவில் 69%, காங்கிரஸ் மற்றும் பாமக ஆகியவற்றில் தரப்புக்கு 50%, பாஜகவில் 48%, தவெகவில் 40%, திமுகவில் 40%, நாதகவில் 25% வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்கிறது ஆய்வு. வேட்பாளர்களில் கடுங்குற்றங்களான கொலை வழக்குகள் உள்ளவர்கள் 13 பேர், கொலை முயற்சி வழக்குகள் உள்ளவர்கள் 44 பேர், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கொண்டவர்கள் 18 பேர் எனவும் தெரியவந்துள்ளது.

கட்சி வாரியாகக் குடுமையான குற்றவியல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்: அதிமுகவின் 170 பேரில் 60 பேர் (35%), பாமகவின் 18 பேரில் 6 பேர் (33%), பாஜகவின் 33 பேரில் 9 பேர் (27%), தவெகவின் 231 பேரில் 43 பேர் (19%), திமுகவின் 175 பேரில் 32 பேர் (18%), காங்கிரசின் 28 பேரில் 5 பேர் (18%), சிபிஐயின் ஐவரில் ஒருவர் (20%) மற்றும் தேமுதிகவின் 10 பேரில் ஒருவர் (10%) என்கிறது ஆய்வு.

குறிப்புச் சொற்கள்