தென்காசி: தமிழ்நாடு தேர்தல் களத்தில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. அந்த வகையில், தற்போது சிறையில் இருந்தபடி வேட்புமனு தாக்கல் செய்துள்ள ஹரி நாடார், அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளார்.
‘நடமாடும் நகைக்கடை’ என்று அழைக்கப்படும் இவர், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.
அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் உள்ள சொத்து விவரங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
அதன் முக்கிய அம்சங்கள்
ஏறக்குறைய 11.650 கிலோ தங்க நகைகள், ரூ. 17.06 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் என மொத்தம் கிலோ கணக்கிலான தங்கம் அவரிடம் உள்ளது.
ரூ.26.76 கோடி அசையும் சொத்துகளும் ரூ.12 லட்சம் அசையா சொத்துகளும் உள்ளன.
மோசடி வழக்குகள் உட்பட மொத்தம் 24 குற்ற வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளன.
ஆறு நான்கு சக்கர வாகனங்களை வைத்துள்ளார்.
ஏற்கனவே 2021 தேர்தலில் இதே தொகுதியில் 37,000க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனத்தை ஈர்த்தவர் இவர்.
தற்போது புழல் சிறையில் இருக்கும் ஹரி நாடார், சிறைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்து வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த முறை இவரை ஆதரித்த ராக்கெட் ராஜாவும் இதே தொகுதியில் போட்டியிடுவதால், ஆலங்குளம் தொகுதி தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

