மதுரை: “இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்த தேர்தலைச் சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நிலையில் உள்ளது,” என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் சனிக்கிழமை (பிப்ரவரி 8) பேசிய திருமாவளவன், “டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்றிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. ஆம் ஆத்மி இந்தளவுக்கு பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பாஜக ஆட்சி அமையுமேயானால் அது தேசத்துக்கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
“நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, டெல்லி தேர்தல் முடிவுகளை ஒரு படிப்பினையாக கொண்டு காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ஆகிய கட்சிகள் இதுகுறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று விசிக வேண்டுகோள் விடுக்கிறது.
“ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்பார்த்தவாறு, திமுக மிக அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. எதிர்பார்த்த வெற்றியை திமுக கூட்டணி, திமுக பெறும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.