நாகர்கோவில்: 2026ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெல்லும் என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த திரு செல்வப்பெருந்தகை இவ்வாறு கூறினார்.
வரும் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், கூட்டணி குறித்தும், எந்தத் தொகுதிகளைக் கேட்க வேண்டும், எவ்வளவு தொகுதிகளைக் கேட்க வேண்டும் போன்றவை குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். எனினும், வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி வெற்றிபெறும். தவெக தலைவர் விஜய், மதவாத சக்திகளிடம் மாட்டிக் கொள்ளக்கூடாது.
பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாதக் கட்சி. காங்கிரஸ் கட்சியோ எல்லாத் தரப்பு மக்களுக்கான கட்சி, ஜனநாயகத்தை விரும்பும் கட்சி. தேர்தலை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு காங்கிரஸ் செயல்படுவதில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே செயல்படுகிறது என்று கூறினார். பேட்டியின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் ரூபி, சட்டமன்ற உறுப்பினர் மனோகரன் உடனிருந்தனர்.