சென்னை: தமிழகத்தில் டெங்கிக் காய்ச்சல் பரவல் தீவிரமடைந்துள்ளது. அதைக் கட்டுப்படுத்தப் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியர்களுக்கும் டெங்கிப் பரவல் குறித்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு, போதிய அளவு மருந்துகளைக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் டெங்கிப் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
இதுவரை 16,000க்கும் மேற்பட்டோர் டெங்கியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தினமும் சராசரியாக 100 பேர் வரை புதிதாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக் காலங்களில் தட்பவெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் டெங்கிப் பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது என பொதுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் செய்தியாளர்களிடம் பேசினார்.
“டெங்கிக் காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ்’ வகைக் கொசுக்கள் மட்டுமன்றி அதன் புழுக்களையும் கண்டறிந்து அழிக்கும் பணியில், 25,158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல், கொசு ஒழிப்பு பணிகளுடன், காய்ச்சல் பாதிப்பு இருக்கும் பகுதிகளிலும், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, தடுப்புப் பணி நடந்து வருகிறது,” என்று அவர் கூறினார்.
