தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் மகளிர் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா அறிமுகம்

2 mins read
01537157-2459-44e0-82b2-238346689c00
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: மகளிருக்குத் துன்பம் விளைவித்தலை தடுக்கும் வகையில் மகளிர் பாதுகாப்புச் சட்டத் திருத்தச் சட்ட முன்வரைவுகளை பேரவையில் ஒப்புதலுக்காக தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்காக வரையறுக்கப்பட்டுள்ள தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தமிழ் நாடு கருதுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறினார்.

மகளிருக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான இரண்டு சட்டத்திருத்த முன்வரைவுகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்து உரையாற்றினார்.

அப்போது அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி, ஒடுக்கி வருகிறது தமிழக அரசு. 86 விழுக்காட்டுக்கும் மேலான குற்றங்களில் 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூகத்தில் மகளிரின் மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரக்கூடிய அரசு திமுக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகைகளிலும் மகளிரை முன்னேற்றப் பாடுபடும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மகளிர் சமூகப் பங்களிப்பும் அதிகரித்து வருகிறது.

மகளிருக்குப் பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. அதிகமான மகளிர் வேலைக்குச் செல்லும் மாநிலமாகவும், சமூகப் பங்களிப்புகளில் அதிகமான மகளிர் பங்கெடுக்கும் மாநிலமாகவும் தமிழ் நாடு வளர்ச்சி கண்டு வருகிறது.

அதேவேளையில் மகளிரின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். முக்கியமாக அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கித்தருவதில் தமிழ் நாடு அரசு உறுதியோடு செயல்பட்டு வருகிறது என்றார் ஸ்டாலின்.

மகளிருக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றம் என்பது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திடும் வகையில் கடுமையானதாக இருக்க வேண்டும் என்று திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

எனவே, அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

குறிப்புச் சொற்கள்