சென்னை: இந்தியா முழுவதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காய்ச்சலாக உள்ளது. நாள்தோறும் நடைபெற்று வரும் இப்போட்டித் தொடருக்கான ஆட்டங்களை நேரில் பார்த்து ரசிக்க ஆயிரக்கணக்கானோர் கூடுகிறார்கள்.
இதனால் இப்போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்கின்றன.
அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிக்குரிய நுழைவுச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன. இணையத்தில் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நுழைவுச் சீட்டு பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியல் 3 லட்சம் வரையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஒரு போட்டியை நேரில் காண 3 லட்சம் ரசிகர்கள் காத்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.
நுழைவுச்சீட்டு கிடைக்காத சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஏற்கெனவே ஐபிஎல் நுழைவுச் சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
தற்போது, நுழைவுச் சீட்டு விற்பனை முறையை விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.