சிவகாசி: மாவட்ட நீதிபதி ஒருவர் தமது ஏழு வயது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டுள்ளது.
தென்காசியைச் சேர்ந்தவர் விஜயபாரதி. இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இடம் மாற்றப்பட்டு சிவகாசி நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, ஆசிரியையாகப் பணியாற்றும் தன் மனைவி கங்கா, மகள் அன்பிற்கினியாள் ஆகியோருடன் சிவகாசி சென்ற விஜயபாரதி, அங்குள்ள விஸ்வநத்தம் ஊராட்சி ஒன்றியப் பகுதி தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துள்ளார்.
அரசுப் பள்ளிகள் தரமாக இல்லை, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை எனப் பலரும் குறை கூறிவரும் நிலையில், நீதிபதி ஒருவர் தனது மகளை அரசுப் பள்ளியில் சேர்த்திருப்பது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீதிபதியின் இந்தச் செயல்பாடு மற்ற பெற்றோர்களுக்கு சிறந்த முன்மாதிரியாக இருக்கும் என்று ஆசிரியர்களும் அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

