சென்னை: தமிழக அரசின் காமராஜர் காலை உணவுத் திட்ட ஒப்பந்தப்புள்ளிகளைப் பெற முயற்சி மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கான நிபந்தனைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
13 உணவு வகைகளில் நாள்தோறும் ஒருவகை உணவு வழங்கவேண்டும். நான்கு வகை உப்புமா, நான்கு வகை கிச்சடி, மூன்று வகை பொங்கல், இரண்டு வகை கேசரி வழங்கவேண்டும். அன்றாடம் காலை 7.30 மணிக்குள் சூடான உணவு, பள்ளிக்கூடங்களுக்குக் கொண்டு வழங்கப்பட வேண்டும். 294 கலோரிகள் சத்துடன் காலை உணவு வழங்கப்பட வேண்டும்.
ஒப்பந்ததாரர்கள் பணம் பெறுவதற்குத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் கட்டாயம் வேண்டும். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வின் மூலம் உணவின் தரம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக கடந்த 2022 செப்டம்பர் மாதம் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது 19.34 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், இத்திட்டத்திற்குப் பெருந்தலைவர் ‘காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 17ஆம் தேதி முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. இதனால், 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாகப் பயனடைவர்.


