கரூர்: கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்புப் பிரசாரத்தின்போது ஆயிரக்கணக்கானோர் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் பலியாகிவிட்டதாக தமிழக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை (செப்டம்பர் 27) நாமக்கல், கரூர் மாவட்டங்களில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பெரும் தொண்டர்கள், ரசிகர்கள் கூட்டம் குவிந்ததால் அங்கு போக்குவரத்து நிலைகுத்தியது.
விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, இரண்டு ஆம்புலன்ஸ்கள் அவ்வழியே சென்றன. இதையடுத்து, அந்த வாகனங்களுக்கு வழிவிடுமாறு தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார். அப்போது திடீரென கூட்ட நெரிசல் அதிகரித்தது.
முதலில் 4 முதல் 18 பேர் இறந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சிங்கப்பூர் நேரப்படி, இரவு 11.45 மணியளவில் பலி எண்ணிக்கை 36ஆக அதிகரித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
இதையடுத்து, விஜய் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுவதால் தவெக தொண்டர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.