சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இவ்வாண்டு மே மாதம் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விரைவு பேருந்துகள் உள்ளிட்ட அரசு பேருந்துகள் சேவை செயல்படத் தொடங்கியது.
மேலும், தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து கிட்டத்தட்ட 500 மீட்டருக்கு குறைவான தூரத்தில் மூன்று நடைமேடைகளுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
வண்டலூர்- ஊரப்பாக்கம் புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் தாமதனானது. இந்நிலையில், மே மாதத்தில் ரயில் சேவை இந்த ரயில் நிலையத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.