சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்ததோடு எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அண்மைக்காலமாக அந்த வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வந்தார். அந்தக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
அதையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகை பாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவு செய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாயை எடப்பாடி பழனிசாமிக்கு இழப்பீடாக வழங்கவும் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.