விருதுநகர்: கடந்த சில நாள்களாக தமிழகத்தில் உள்ள சிற்றூர் ஒன்று இணையத்தில் அதிகம் தேடப்படும் இடமாக மாறிவிட்டது.
இன்ஸ்டகிராம், டுவிட்டர் என சமூக ஊடகங்கள் அனைத்திலும் தமிழகச் சிற்றூரான கூமாபட்டி குறித்து அதிகம் பேசி, விவாதிக்கப்படுகிறது.
கூமாபட்டி பகுதியின் அருமை, பெருமைகள் குறித்த பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கூமாபட்டி தொடர்பான ஒரு காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
காணொளியில் பேசும் ஓர் ஆடவர், மன அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உடனடியாக கூமாபட்டிக்குப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அங்குள்ள இயற்கைச் சூழல், மனதுக்கு மிகுந்த இதம் தரும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூமாபட்டி தனித்தீவு போன்ற அமைப்புள்ள பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் அப்பகுதியில் பல இயற்கை சார்ந்த இடங்கள் உள்ளன,” என்றும் காணொளியில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஏராளமான இளையர்கள் கூமாபட்டி எங்கே இருக்கிறது என அந்த ஊருக்கு கூகல் மூலம் வழிதேட ஆரம்பித்துவிட்டனர். இதனால், கூமாபட்டி என்ற சிற்றூர் இணையத்தில் தேடப்படும் இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு என்ற ஊருக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலை அடி வாரத்தில் அமைந்துள்ளது கூமாபட்டி கிராமம்.