சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் கடந்த ஆகஸ்ட் 5 முதல் 9ஆம் தேதி வரை தேசிய மாணவர் படையின் (என்சிசி) பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்தப் பயிற்சி முகாம் உரிய அனுமதி பெறாமல் நடைபெற்ற பயிற்சி முகாம் என்று கூறப்படுகிறது. இந்தப் பயிற்சி முகாமில் 17 மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.
இந்த மாணவிகள் அனைவரும் பள்ளியில் உள்ள கலையரங்கில் தங்கவைக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி தேதி கலையரங்கில் தூங்கிக் கொண்டிருந்த 12 வயது மாணவியை அதிகாலை 3 மணியளவில் எழுப்பிய பயிற்றுநர் சிவராமன், அந்த மாணவியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. காவேரிப்பட்டிணத்தைச் சேர்ந்த பயிற்றுநர் சிவராமன் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், பர்கூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், பள்ளி முதல்வர் சதீஷ்குமார், சமூக அறிவியல் ஆசிரியர் ஜெனிஃபர், தாளாளர் சாந்தன், என்சிசி பயிற்றுநர்களான சக்திவேல், இந்து, சத்யா, சுப்பிரமணி, சிவராமன் ஆகியோரை கைது செய்தனர்.
இது தொடர்பான புகாரில் சிவராமன் உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், அனுமதி இல்லாமல் இதுபோல ஏற்கெனவே போலியாக என்சிசி முகாம் நடத்தியிருப்பதும் தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறை புலனாய்வுத்துறை ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்புக்குழுவை அமைத்து தமிழக முதல்வர் உத்தரவிட்டு்ள்ளார்.
சிவராமன் உயிரிழப்பு
இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சிவராமன், நச்சு உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த சத்யா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவராமனுடன் உடன் பிறந்தவர்கள் 2 அண்ணன் மற்றும் ஒரு அக்கா உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கை உயர் நீதிமன்றமே தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனக்கோரி காங்கிரஸ் வழக்கறிஞரான ஏ.பி. சூர்யபிரகாசம், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வில் முறையீடு செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக வழக்கு தொடரப்பட்டால் விசாரிக்கப்படும், என தெரிவித்தனர்.

