தயிர் பாக்கெட்டுகளில் 'தஹி' என்ற இந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 'ஆவின்', கர்நாடகாவின் 'நந்தினி' உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு, தர ஆணையம் கடிதம் அனுப்பியது.
அதில் ஆவின், நந்தினி நிறுவனங்களின் தயிர் பாக்கெட்டுகளில் 'தஹி' என பெரிய எழுத்திலும், அதைத் தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் தமிழில் தயிர், கன்னடத்தில் மொசரு என்றும் குறிப்பிட வேண்டும் எனத் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்த விவகாரம் இருமாநிலங்களிலும் சர்ச்சையைக் கிளப்பியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கன்னட அமைப்புகள் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், இந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்பதால் ஆவின் நிர்வாகம் இந்த உத்தரவை பின்பற்றாது எனத் திட்டவட்டமாகக் கூறினார்.
ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், இதை நடைமுறைப்படுத்த முடியாது என ஆவின் நிறுவனம் பதிலளித்துள்ளது.
இந்த நிலையில், இந்திச் சொல்லை குறிப்பிட வேண்டும் என்ற மத்திய அரசின் நிறுவனமான FSSAI உத்தரவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் #FSSAI, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்.
"மக்களின் உணர்வுகளை மதியுங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்," என எச்சரித்துள்ளார்.

