விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

விஜய்க்கு தலைவர்கள் வாழ்த்து

2 mins read
9c041619-e556-403f-a49d-f4b4e3847bad
இலங்கை அதிபர் அனுர குமர திசநாயக்க. - படம்: தினமணி

சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசஃப் விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சமூக ஊடகப் பக்கத்தில் தமிழில் தனது வாழ்த்துச் செய்தியைப் பதிவிட்டுள்ளார்.

“விஜய்யின் பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். தமிழக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தொடர்ந்து தமிழக அரசுடன் இணைந்து பணியாற்றும். இது மத்திய-மாநில உறவுகளில் ஒரு சுமுகமான தொடக்கத்தைக் குறிக்கிறது,” என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டின் முதல்வராக நடிகர் விஜய், ஏழை எளியோருக்கான நலத்திட்டங்களையும் அனைவருக்கும் சமமான நீதியையும் வழங்கி, உங்கள் மாநிலத்தை வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் எனத் தாம் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, தமிழக முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற தாம் ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கை அதிபர் அனுர குமர திசநாயக்க கூறியுள்ளார்.

தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையேயான கலாசார, வரலாற்றுப் பிணைப்புகளை அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் ஆழமான உறவின் அடிப்படையில், பொருளியல் முன்னேற்றம், வட்டாரச் செழிப்பு தொடர்பாக முதல்வர் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற இலங்கை அதிபர் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்எல்ஏ வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “எங்க வீட்டுப் பையன் தம்பி விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“விஜய்க்கும் அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள். திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்