சென்னை: ரயில்கள் மீது கல்லெறியும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், ரயில்வே துறையின் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இனி ரயில் மீது கல்லெறிபவர்களுக்கு ரயில்வே சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுச் சிறைத் தண்டனை கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் பல்வேறு வழித்தடங்களில் விரைவு, பயணிகள் ரயில் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் மீது கல்லெறியும் ஆபத்தான சம்பவங்கள் நிகழா வகையில் ரயில்வே காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
ரயில் மீது கல் வீசுவது உறுதி செய்யப்பட்டால், அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, ரயிலுக்கு ஏற்பட்ட சேதத்திற்குச் சமமான தொகை அவர்களிடம் வசூலிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
கண்ணூர் விரைவு ரயில்மீது கடந்த மாதம் 30ஆம் தேதி நடந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் ரயில்வே காவல்துறை இரண்டு பேரைக் கைது செய்தது.
பயணிகள், ரயில்வே துறை பணியாளர்கள் மற்றும் ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதுபோன்ற நாச வேலைகளில் ஈடுபடுவோர் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய ரயில்வே துறை.
இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை் ரயில்வே சட்டத்தின் கீழ் பிணையில் விடுதலையாக்க முடியாது.
பயணிகள் அல்லது ஊழியர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
முதல்முறை குற்றம் புரிந்தவராக இருந்தால் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் சிறையும் மறுமுறை அக்குற்றத்தைச் செய்வோர் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.