சென்னை: தமிழக அரசுப் பேருந்துகளில் ‘ஹெட்போன்’ பயன்படுத்தாமல் அதிக சத்தத்துடன் காணொளிகள் பார்க்கவும் பாடல்கள் கேட்கவும் தடை விதிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பேருந்துப் பயணத்தின்போது இத்தகைய நடவடிக்கைகள் மற்ற பயணிகளுக்குத் தொல்லை கொடுப்பதாக உள்ளது என பலர் புகார் எழுப்பியதையடுத்து அரசு, மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டது.
அரசுப் பேருந்துகளில் கைப்பேசியைச் சிலர் பயன்படுத்துவது குறித்து பேருந்து நடத்துநர்கள் கண்டிக்கும்போது அது வாக்குவாதமாக மாறிவிடுகிறது.
எனவே, ‘மெட்ரோ’ ரயில்களுக்கான சில விதிமுறைகளை அரசுப் பேருந்துகளிலும் பின்பற்ற வேண்டும் என ஒருதரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது மெட்ரோ ரயில்களில் அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பது, ‘ரீல்ஸ்’ போன்ற காணொளிகளைப் பார்ப்பது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த விதிமுறைகளைப் பயணிகளின் நலன் கருதி அரசுப் பேருந்துகளிலும் அமல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாகத் தமிழகப் போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ், பயணிகள் சில விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவுறுத்தவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பேருந்துப் பயணத்தின்போது கைப்பேசியில் உரத்தக் குரலில் தொடர்ந்து பேசக்கூடாது என்றும் மற்ற பயணிகளுக்கு எந்தவிதமான இடையூறுகளும் ஏற்படாத வகையில் கைப்பேசிகளைப் பயன்படுத்தவேண்டும் என்றும் திரு நிர்மல் ராஜ் மேலும் கூறியுள்ளார்.

