சென்னை: சென்னையில் இருந்து 123 பயணிகளுடன் அந்தமானுக்குப் புறப்பட்ட இண்டிகோ விமானம் அவசரமாக ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னையில் இருந்து சனிக்கிழமை (டிசம்பர் 21) காலை 10.30 மணிக்கு 148 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டது. அதையறிந்த விமானி, விமானத்தை ஓடுபாதையிலேயே அவசரமாக நிறுத்தினார். அதில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டனர்.
அந்தமான் செல்ல இருந்த 148 பயணிகள், எட்டு விமான ஊழியர்கள் உள்பட 156 பேரும் நல்லவேளையாக உயிர்தப்பினர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாற்றைச் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது என்றும் அது விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும் என்றும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், “விமானம் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் அதே விமானத்திலோ அல்லது வேறு விமானத்திலோ பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
“பயணிகளுக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன,” என்று இண்டிகோ விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.