தேனி: தனது தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்த ஆடவர், தேனி மாவட்ட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அங்குள்ள வருஷநாடு பகுதியைச் சேர்ந்தவர் தமிழன். 56 வயதான இவர், தனக்குச் சொந்தமான தோட்டத்தில் கஞ்சா செடிகளை வளர்த்து அதைக் காய வைத்து உதிரியாக விற்று வந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தைப் பார்த்த காவல்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு தமிழன் வளர்த்து வந்த கஞ்சா செடிகள் 10 அடி உயரத்துக்கு வளர்ந்திருந்தன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் தன் வீட்டுத் தோட்டத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து தமிழன் நீண்டகாலமாக கஞ்சா செடிகளை வளர்த்து வருவது தெரிய வந்தது. அப்பகுதியில் உள்ள இளைஞர்களிடம் அவர் கஞ்சாவை விற்று வந்துள்ளார்.
கடந்த ஆண்டு கொலை வழக்கில் சிக்கி, ஏற்கெனவே சிறை சென்ற தமிழன் சில மாதங்களிலேயே பிணை பெற்று வெளியே வந்துவிட்டார்.
அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

