சென்னை: உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்காமல், மனைவி பெயரில் சொத்துகளை வாங்கிய மாவட்ட நீதிபதிக்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அளிக்கப்பட்ட கட்டாய ஓய்வு சரியான தீர்ப்புதான் என்று அந்த நீதிபதியின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
கடந்த 2018ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட எஸ்.குணசேகர் என்பவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாகக் கடந்த 2020 ஏப்ரல் 20 ஆம் தேதி அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதே ஆண்டு விருப்ப ஓய்வு கேட்ட நீதிபதியின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு நிராகரித்தது. இந்நிலையில் அவருக்கு 58 வயது நிறைவடைந்ததையடுத்து கடந்த 2021 ஆகஸ்டு 23ஆம் தேதி அவருக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பணி நீட்டிப்பு வழங்காமல் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியான குணசேகர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முன்னிலையான மனுதாரரான குணசேகர், ‘‘தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியர், அவரது குடும்பத்தினரின் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. குடும்பத்தினர் வாங்கிய சொத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற சுற்றறிக்கை, அரசு ஊழியர் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே, எனக்குக் கட்டாய ஓய்வு அளித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’, என்று கேட்டுக் கொண்டார்.
உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பினர் வாதிடுகையில், ‘‘நீதிமன்ற ஊழியர்களிடம் மோசமான முறையில் நடந்துகொண்டது. மனைவி பெயரில் வாங்கப்பட்ட பி.எம்.டபிள்யூ சொகுசு கார் உள்ளிட்ட சொத்து விவரங்களை அவர் உயர் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை. மேலும், அவருடைய வங்கிக் கணக்கில் பெரும் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காகவே அவருக்குக் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது,’’ என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘நீதித்துறை அதிகாரியான மாவட்ட நீதிபதிகளும் உயர் நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்டவர்களே. நீதித்துறையினர் உச்சபட்ச நேர்மையைப் பிரதிபலிப்பவர்களாக இருக்க வேண்டும். எனவே, மனுதாரருக்குக் கட்டாய ஓய்வு அளித்த உயர் நீதிமன்ற முழு அமர்வு நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழுவின் முடிவில் தலையிட முடியாது,’’ எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

