சென்னை: மெரினா கடற்கரையில் இயங்கிவந்த பல கடைகள் இதுநாள் வரை குண்டர் கும்பல்களின் (மாஃபியா) கட்டுப்பாட்டில் இருந்ததாக சென்னை உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டி உள்ளது.
கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்தக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை, இரு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு விசாரித்து வந்தது.
அப்போது, மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை (மார்ச் 4) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மெரினாவை வியாபாரத் தலமாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க இயலாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
கேரளாவின் கோவளம், ஒடிசாவின் பூரி, மும்பை மெரைன் டிரைவ் போன்ற கடற்கரைகளைப்போல் மெரினாவையும் அழகுபடுத்தி சுத்தமாகப் பராமரித்தால் மட்டுமே இந்தியச் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் வருகை தருவர் என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
“நீதிமன்றம் தலையிடும் முன்பாக, மெரினா கடற்கரை முழுமையாக கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சுத்தமில்லாமல் இருந்தது. அந்தக் கடைகள் குண்டர் கும்பல்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. கடை உரிமையாளர்களை மிரட்டி மாமூல் வசூலித்து வந்த அந்தக் கும்பல் நீதிமன்றத் தலையீடு காரணமாக பின்புலத்தில் இருந்து கொண்டு சிலரைத் தூண்டிவிடுகிறது.
“கடைகளை முறைப்படுத்தும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அழகான மெரினாவை எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச்செல்ல முடியாது,” என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

