சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் முக்கியத் தேர்தல் வாக்குறுதியான தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
சமூக நலன் சார்ந்த அந்தத் திட்டத்தைப் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதியன்று, முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையிலும், தாய்மையின் பெருமையைக் கொண்டாடும் வகையிலும் அத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு, அம்மாநில முதல்வர் சார்பில் ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படும்.
2026 ஜூன் 22ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் அத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.
தலா ஒரு கிராம் எடையுள்ள 4,41,667 தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்வதற்கான அதிகாரபூர்வ ஒப்பந்தப் புள்ளிக்கான ஏலக்குத்தகையைத் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது.
கிட்டத்தட்ட ரூ. 755.83 கோடி மதிப்பீட்டில் இந்தக் கொள்முதல் நடைபெறவுள்ளது. தகுதியான ஒப்பந்ததாரர்கள் ஜூலை 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ரூ. 5,725 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
எண்ணற்ற குடும்பங்கள் பயன்பெறும் இத்திட்டத்தின் தொடக்க நிகழ்வானது, தவெக அரசின் கொள்கைகளுக்கும், தமிழகத்தின் சமூக மேம்பாட்டிற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

