இனி கதைகள் வழியே கணிதப் பாடம்: அமைச்சர் ராஜ்மோகன்

இனி கதைகள் வழியே கணிதப் பாடம்: அமைச்சர் ராஜ்மோகன்

1 mins read
6cfa3fd3-459f-47f9-881e-2cc763a6875e
உளர்வான சூத்திரங்களாக அல்லாமல் கதைகளினூடே கணித நுணுக்கங்களை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்த தமிழகக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. - சித்திரிப்புப் படம்: தமிழக அரசு
Google News Preferred Icon

சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் கதைகள் மூலமாக கணிதப்பாடம் கற்பிக்கப்படும் எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மாணவர்களுக்குக் கணிதப் பாடத்தின் மீதான அச்சம் நீங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கு ஏதுவாக கணிதப் பாடங்களின் தலைப்புகள் மாற்றப்படும் என்றும் பகுப்பாய்வு, சிந்தனைத் திறனை வளர்ப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உளர்வான சூத்திரங்களாக அல்லாமல் கதைகளினூடே கணித நுணுக்கங்களை விவரிக்கும் புதிய கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தத் தமிழகக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

புதிய புத்தகங்கள், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எளிதில் கற்பிக்க, பயிலத் தேவையான பயிற்சிகளும் மாற்றங்களும் மேற்கொள்ளப்படும் எனக் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே கணிதப்பாடத்தை அணுகுவதில் ஒருவித அச்சம் நிலவுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் அறிமுகமாகிறது. கதைகள் மூலம் கணிதப் பாடம் கற்பிக்கும்போது மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையோடு கணித நுணுக்கங்களைப் பிணைத்து புரிந்துகொள்ள முடியும் எனத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்