சென்னை: சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன், தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து நேற்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மூலக்கொத்தளத்தில் ரூ.34.30 லட்சம் செலவில் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,
1938ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதியில் தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது.
சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில் 1919ல் பிறந்த நடராசன் என்பவர் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.
அவருக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவரை டிசம்பர் 30 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்தது காவல் துறை.
பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராசன் 1939ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி தமிழுக்காகத் தன்னை முதற்பலியாக்கிக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
குமார ராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையில் இருந்து தன்னுடைய சீருந்திலேயே கறுப்புக் கொடி போர்த்தி, பெரும் ஊர்வலமாக நடராசனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது.
மறுநாள் ஜனவரி 16ல் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலத்தில் பேரறிஞர் அண்ணா, டாக்டர் தர்மாம்பாள், அ.பொன்னம்பலம், கு.மு.அண்ணல் தங்கோ. ஆல்பர்ட் ஜேசுதாசன், நாராயணி அம்மையார் முதலானோர் புகழுரையாற்றினர். நடராசனின் இழப்பு, மேலும் பலரையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.
முதற் களப்பலியான நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்து என்ற இளைஞரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் அபராதமும் தண்டனையாகப் பெற்றுச் சிறைப்பட்ட மூன்று வாரங்களுக்குள் 1939 மார்ச் மாதம், 11ஆம் தேதி உயிரிழந்தார்.
மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளி விளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுக்கூரப்படுகிறார்கள்.
இதனைப் புதுப்பிக்கவும் மொழிப்போர் தியாகிகள் தினத்தை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என பெயரிட்டு அழைக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, திமுக சார்பில் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசவுள்ளார். பிற மாவட்டங்களிலும் பொதுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.