கோவை: கோவையில் பரோட்டா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கீர்த்தனா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், துடியலூர் அருகே தொப்பம்பட்டி பிரிவு பேர்லேண்ட்ஸ் குடியிருப்பில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகள் கீர்த்தனா. இவருக்கு வயது 22. கற்பகம் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) இரவு பரோட்டா சாப்பிட்டு படுக்கச்சென்றார்.
திங்கட்கிழமை (டிசம்பர் 2) காலையில், கீர்த்தனாவை அவரது பெற்றோர் பார்த்தபோது மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் கீர்த்தனா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் இறந்தார். துடியலூர் காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை கீர்த்தனா சாப்பிட்ட பரோட்டா எங்கு தயார் செய்யப்பட்டது, பரோட்டாவில் ஏதும் கலப்படம் சேர்க்கப்பட்டுள்ளதா என பல கோணத்தில் காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பரோட்டா சாப்பிட்ட மருத்துவ மாணவி உயிரிழந்த சம்பவம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.