புதுச்சேரி: புதுச்சேரியில் உரிமம் இன்றித் தயாரிக்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகளை மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.
புதுவையில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகார்களை அடுத்து மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பும் புதுவை மருந்துகள் கட்டுப்பாட்டு துறையும் இணைந்து அங்கு பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதில் மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த மாத்திரைகள், புதுவை பிச்சைவீரன் பேட்டையைச் சேர்ந்த நேச்சுரல் கேப்ஸுல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த நெபுலே பார்மசியூட்டிகல்ஸ், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேபுலஸ் லைப் சயின்சஸ் மூலம் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டிருந்த பிரைமரி பேக்கிங் மாத்திரைகள் உள்ளிட்ட மேலும் பல மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் புதுவை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன என்று அவர்கள் கூறினர்.