புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட இருந்த மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட இருந்தார்.
மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது காங்கிரஸ் கட்சிக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மாநிலங்களவையில் காலியாக உள்ள 27 இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மத்தியப் பிரதேசத்திலிருந்து மூன்று இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அம்மாநிலச் சட்டமன்றத்தில் 230 உறுப்பினர் உள்ளனர். ஒரு வேட்பாளர் வெற்றி பெற 58 வாக்குகள் தேவை.
பாஜகவிடம் 164, காங்கிரசிடம் 64 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் பாஜக சார்பாக இருவரும் காங்கிரஸ் சார்பாக ஒருவரும் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
பாஜக பொதுச் செயலாளர் தருண் சக், மாநிலச் செயலாளர் ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர்.
பாஜகவிடம் 48 வாக்குகள் உபரியாக இருப்பதால் மூன்றாவது வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அதேபோல் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மீனாட்சி நடராஜன் காங்கிரஸ் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
எனினும், ஹைதராபாத் நீதிமன்றத்தில் தன்மீது நிலுவையில் உள்ள ஒரு குற்ற வழக்கு விசாரணை குறித்த விவரத்தை மீனாட்சி நடராஜன் குறிப்பிடாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
“முன்பு மத்தியப் பிரதேசத்தில் தேர்தல்களைச் சீர்குலைத்தது போலவே, இப்போதும் மாநிலங்களவை தேர்தலைத் தங்களுக்குச் சாதகமாக வளைக்க பாஜகவினர் வெளிப்படையாக முயற்சி செய்கின்றனர்,” என்று மீனாட்சி நடராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

