சென்னை: பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிசம்பர் 9ஆம் தேதி முதல் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஃபென்ஜல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தொடர்ந்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழைபெய்துள்ளது. இன்னும் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள பள்ளி அரையாண்டுத் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் எந்த மாற்றமுமின்றி வருகிற டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி முதல் நடைபெறும்.
“வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் 9ஆம் தேதிக்குள் இயல்பு நிலை திரும்பவில்லை எனில், அந்த பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்வார்கள்.
“டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கவிருந்த செய்முறைத் தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.