திருவள்ளூர்: தமிழ் நாட்டில் முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் முகாமைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (மே 12) நடைபெற்றது.
திருவள்ளூர் அருகேயுள்ள திருப்பாச்சூர் துணை சுகாதார நிலையத்தில் மக்கள், நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிறுபான்மையினர் நலம், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் விரிவாக்கத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியபோது, “தற்போதைய நிலையில் பொதுமக்களிடையே புற்றுநோய் அதிகரித்து வருகிறது.
“மாநில அளவில் ஏற்கெனவே ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 15.48 லட்சம் பேருக்குப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 359 பேருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
“இந்நிலையில், அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, ஆரம்பக் கட்டத்திலேயே நோயைக் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும்.
“மாநில அளவில் ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 12 மாவட்டங்களில் வாய்ப் புற்றுநோய், கர்ப்ப வாய் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய்களைக் கண்டறியும் திட்டம் திருப்பாச்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.