சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் காணாமல்போன சிங்கம் இருக்கும் இடத்தை ஆளில்லா வானூர்தி மூலம் ஐவர் கொண்ட குழு கண்டுபிடித்தது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், ‘ஷெரூ’ என்ற ஆண் சிங்கம் காணாமல் போனனதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கம் ‘லயன் சஃபாரி’ என்ற பகுதியில் இருந்து மாயமானது குறித்து உயிரியல் பூங்கா நிர்வாகம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
ஐந்து வயதுடைய சிங்கம், கடந்த புதன்கிழமை காலை 28 ஹெக்டேர் பரப்பளவுள்ள ‘லயன் சஃபாரி’ பகுதிக்குள் விடப்பட்டது. ஆனால், வழக்கம்போல் மாலை உணவிற்காக அது தனது அடைப்பிடத்திற்குத் திரும்பவில்லை.
ஆரம்பத்தில் ஒருசில நாள்கள் சுற்றிய பிறகு சிங்கம் திரும்பி வந்துவிடும் என்று அதிகாரிகள் இருந்த நிலையில், அது திரும்பி வராதது பூங்கா நிர்வாகத்திற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியது.
சிங்கத்தைக் கண்டுபிடிக்க, உயிரியல் பூங்கா நிர்வாகம் அடர்ந்த சஃபாரி வனப்பகுதியில் ‘ட்ரோன்கள்’ மூலம் தீவிர தேடுதல் பணியைத் தொடங்கியது.
இந்நிலையில் காணாமல்போன சிங்கம் ‘லயன் சஃபாரி’ என்ற பகுதியில் இருப்பது ஆளில்லா வானூர்தி மூலம் 5 பேர் கொண்ட குழுவால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சிங்கம் தானாகவே உணவுக்காக கூண்டுக்கு வந்துவிடும் என பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

