சென்னை: தமிழக அரசு நெகிழி (பிளாஸ்டிக்) பொருள்களின் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, நெகிழி பைகளைப் பயன்படுத்துவதற்கு பதிலாக மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டம் அறிமுகமானது.
இதையடுத்து, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் நெகிழிப் பைகளை உபயோகிப்பதை தடுக்க ரூ.5 செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் வகையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, தற்போது நெகிழி பாட்டில்களை பொது இடங்களில் போடுவதைத் தடுக்க தமிழக அரசு புதிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இயந்திரம் ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. அதில் காலி நெகிழி போத்தல்களைப் போடும்போது, அதிலுள்ள ‘சென்சார்’ மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கும் வகையில் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
‘சோலார்’ முறையில் இயங்கும் இந்த இயந்திரத்தில் 300 காலி போத்தல்கள் வரை சேமிக்க முடியும்.
இதுகுறித்து குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் ரெமா கூறுகையில், “புதிதாக ஒரு இயந்திரத்தை பார்ப்பவர்கள் அது எவ்வாறு இயங்கும் என்பதில் ஆர்வம் காட்டுவர். அதில் காலி போத்தல்களைப் போட்டு சோதித்துப் பார்ப்பார்கள்.
“இந்தப் பழக்கம் நாளடைவில் காலி போத்தல்களைப் பொது இடங்களில் வீசக்கூடாது என்ற நல்ல எண்ணத்தை உருவாக்கும்,” என்றார்.