புதுடெல்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 143வது பிறந்த நாளையொட்டி, அவரது முழுமையான படைப்புகளின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (டிசம்பர்11) வெளியிட்டுள்ளார்.
பாரதி அறிஞர் என்று அழைக்கப்படும் சீனி விசுவநாதனால் தொகுக்கப்பட்டுள்ள தேசியக் கவி பாரதியின் 23 தொகுதிகள் அடங்கிய முழுப் படைப்புகளின் தொகுப்பு, 10,000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது. பரமத்திவேலூரைச் சேர்ந்த 81 வயதான சீனி விசுவநாதன் அவர்களால் கடந்த 64 ஆண்டுகளாகத் திரட்டி தொகுக்கப்பட்டுள்ளது.
டெல்லி லோக் கல்யாண் மார்கில் உள்ள தனது இல்ல நிகழ்ச்சியில் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய பிரதமர், “தன்னலமற்ற சேவைக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் பாரதியார்” என்று குறிப்பிட்டார்.
“நாட்டின் முக்கியத் தேவைகளை மனத்தில் வைத்து தொலைநோக்குப் பார்வையுடன் உழைத்தவர் சுப்பிரமணிய பாரதி. பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அவர் ஓய்வின்றி பங்களித்தவர்.
“பாரதியாரின் புகழ் தமிழ்நாட்டையும் தமிழ் மொழியைக் கடந்தும் பரந்து விரிந்துள்ளது.
“அவர் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், தன்னுடைய வாழ்வை பாரதத் தாயின் தன்னிலமற்ற சேவைக்காக அர்ப்பணித்தவர்,” என்று பிரதமர் புகழாரம் சூட்டினார்.